அனைத்து நண்பர்களுக்கும் இந்த பனித்துளி சங்கரின் இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!
தீபங்களின் ஒளியும் .,
உங்கள் அனைவரின் புன்னகையின் ஒலியும்
ஒன்றாய் இணைந்து ஒரு புது சந்தோச ஒளி
உங்கள் இல்லங்களில் ஒளிக்கட்டும் .!
இது வரை உங்களின் இதழ்களை மவுனம் மட்டுமே
அலங்கரித்திருந்தாலும்., இந்த இனிய திருநாளில்
வண்ண வண்ண மத்தாப்பூ வார்த்தைகள்
உங்கள் இதழ்களில் மலரட்டும் .!
உங்கள் மேனி தொடும் புது ஆடைகளின்
அழகில் மயங்கி சாலையோரா பூக்கள்கூட
வெட்கத்தில் முகம் மறைத்துக் கொள்ளட்டும் .!
தூரத்தில் இருந்து ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும்
ஏழைக் குழந்தைகளை சத்தம் போட்டு அழைத்து
சத்தமில்லாமல் வண்ண வண்ண பட்டாசுகளையும்
தித்திக்கும் இனிப்புகளையும் அள்ளிக்கொடுத்து அவர்களின்
மகிழ்ச்சியின் முகவரியை அறிமுகப்படுதுங்கள். !
சுற்றி சுற்றி ஓய்ந்து போய் ஓரமாய் கிடக்கும்
சங்கு சக்கரங்களிடம் கால் வலிக்கிறதா ?
என்று கேட்டு ஆறுதல் கூறுங்கள் .!
முடிந்தால் பகலுக்கு விடுமுறை கொடுத்து .
கவிதை பேசும் நிலவுடன் கூடிய
இனிய இரவுகளை நீளச் செய்யுங்கள்.!
இந்த இனிய இரவினில் இன்னும்
உறங்கிக்கொண்டிருக்கும் உங்கள் வீட்டு
விளக்குகளை எழுப்பி அவற்றிற்கு
முகம் கழுவி புதுப்பொலிவு ஏற்றி சற்று சிரிக்கச் சொல்லி
இரவுக்கும் விடுமுறை கொடுங்கள் .!
சத்தம் போட்டு வெடிக்கப்போகும் பட்டாசுளை
வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத
எறும்புகளிடம் சற்று குனிந்து ஓடிப்போய் ஒளிந்து கொள்ளுங்கள்
என்று அதன் காதுகளில் இரகசியமாய் ஓதுங்கள் .!
இயன்றால் கண்களில் தென்படும் அனைத்துப்
பறவைகளையும் மதியம் உங்கள் வீட்டு விருந்துக்கு கூப்பிடுங்கள் .!
எறும்புகளின் வீடுகளுக்கே சென்று இனிப்பு வழங்குங்கள்.
சத்தமாய் வீசும் காற்றை அதட்டி
சற்று அமைதியாய் இருக்க சொல்லுங்கள் .
ஊனமென்று கூறிய உதடுகள் உறைந்துபோகும்வரை
இயலாதவர்களுக்கு ஊன்றுக்கோலாய் இருங்கள். !
இப்படி இயன்ற அளவில் இன்று
ஒருநாள் புதுமை பரப்புங்கள்.
பார்க்கும் விழிகள் எதுவும் உங்களை
பார்க்காது கடந்து சென்றாள் ஒன்றாய் சேர்ந்து
சத்தமாக இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
என்று புன்னகையுடன் சொல்லுங்கள் என்னைப்போல் !!!
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.