பனித்துளி சங்கரின் காதல் சிலுவைகள் - தமிழ் கவிதை

 


உன்
திறந்த இதயத்தில்
உந்தன் அனுமதி இன்றி
என் காதலை பூட்டியவள் நான்தான் .

உன் நினைவுகளின் வெப்பத்தில்
குளிர் காய்கிறேன் என்று
நடுக்கத்துடன் சொன்னவளும் நான்தான் .

நீ
பார்க்கும்போது
உன் விழிகளுக்கு காட்சிகளாய்
நான் இருப்பேன் என்றேன் .


நீ பேசும்பொழுது
உனது வாக்கியத்திற்கு வார்த்தைகள்
நான் தொடுப்பேன் என்றேன் ....

உன் நிஜவிரல் பிடிக்கும் வரை
தினம் உன் நினைவுகளின்
விரல் பிடித்து
நடப்பேன் என்றேன்.

இரவினில் உன் இமைகள் மூட மறுக்கும்
நேரத்தில் எல்லாம்
என் நினைவுகள்
உன்னை தாலாட்டும் என்றேன் ....

நமது திருமணத்தில்
வானம் இசை அமைக்க
இடிகள் இசைக்கருவிகளாகும் என்று
சொன்னவளும் நான்தான்,

மேகங்கள் அட்சதை தூவ
நட்சத்திரங்கள் மலர்களாகும் என்று
சொன்னவளும் நான்தான் ,

நம் காதல் பொய்த்தால்
கடல் நீர் வற்றிப்போகும் ,
மழைத்துளி அமிலமாகும் ,

ஒற்றைத் தீக்குச்சியில்
இந்த உடல் உனக்குமுன்
உடன் கட்டை ஏறும் என்று
சொன்னவளும் நான்தான் ....

நம்மை பிரிக்க நேர்ந்தால்
இருவரையும் ஒன்றாய்
சிக்கன சிலுவையில்
அறைந்துக் கொல்லட்டும் என்றேன் ....

உன்னை பிரிந்து சுவாசிக்க மாட்டேன்.
ஒருவேளை பிரிய நேர்ந்தால்
இந்த சுவாசமே வேண்டாம் என்றேன்

இவை அனைத்தையும் உச்சரித்த
இதே உதடுகளால்தான்
இன்று உன் இதயத்தை தொலைக்கப் போகும்
இந்த வார்த்தை ஈட்டிகளையும் வீசுகிறது .....

என் வீட்டில் அடுப்பெரிக்க
இன்று நாம் காதல் விறகாகிப்போனது .
என்னை மன்னிக்கவேண்டாம்
என்னை மறந்து விடுங்கள் !

உன்னை நேசித்தது நிஜம் !
தினம் உன் நினைவுகளிலே
சுவாசித்தது நிஜம் !

காதலில் இணைவது போன்ற
கதைகள் கேட்ட நான்
ஏனோ பிரிவது போன்ற கதைகள்
கேட்க மறந்துவிட்டேன்....

காதல் செய்வதற்க்கு
நாம் இருவர் போதும் என்றேன்
இன்றுதான் அது இந்தியக் காதலில்
கண் மூடி சொல்லும் பொய் என்று உணர்ந்தேன் ...

காதலுக்கு
கட்டுத்தரிக்கூட கிடையாது
ஆனால்
கல்யாணத்திற்கு கட்டுத்தரி மட்டும் அல்ல
கடிவாளமும் சேர்ந்து வந்துவிடுகிறது ....

பறப்பதற்கு கற்றுத் தந்தாய்
என் காதலா .
என் சிறகுகளில் கடிவாளம்
இறுக்கப்பட்டு இருப்பதை யார் அறிவாரோ !...

குழந்தைகளின் பசியைவிட
சாராயதின் ருசியை அதிகம் அறிந்த
என் தந்தை !

ரேசன் கடையில் தந்த சேலையின்
இளமை தொலைந்தும் இன்னும்
கிழிந்த போத்தலை தைத்து
மானம் காக்க போராடும் என் தாய் !

தான் பூப்பெய்த செய்திகூட தெரியாது
ஆவேசமாய் அடுப்பூதும் என் தங்கை!

ஓசியில் பக்கத்து வீட்டில் கருப்பு வெள்ளைப்படம்
பார்த்த கனவுகளை என் வீட்டிலும்
நிஜமாக்கத் துடிக்கும் என் தம்பி !

இத்தனை பேருக்கும் மொத்தமாய் மாதம்,
மாதம் செயற்கை சுவாசம் கொடுக்கும்
ஆக்சிஜன் குடுவையாய் நான் மட்டும்.

இத்தனை கடிவாளங்களின் ஒரு முனை என் கழுத்திலும்
மறுமுனை அவர்களின் கழுத்திலும்
சுருக்குக் கயிராய் பிணைக்கப்பட்டுள்ளது
.
எப்படி ஓடிவருவேன் காதலா !!???
இத்தனை உயிர்களை கொன்ற
கொலைகாரி என்றப் பட்டத்துடன்
உன் மனைவியாக !

உன்னை காதலித்து ஏமாற்றியவளாக
இருந்துவிட்டுப் போகிறேன் இந்த
ஜென்மத்தில் மட்டும் மன்னித்துவிடுங்கள்,

உங்கள் நினைவுகளை
மறக்க முடியாத இவளை மறந்துவிடுங்கள்........

- கவிஞர் பனித்துளி சங்கர்.

0 மறுமொழிகள் to பனித்துளி சங்கரின் காதல் சிலுவைகள் - தமிழ் கவிதை :